1. தோற்றம்:
பூமியில் வாழும் லட்சக்கணக்கான ஜீவராசிகளுக்குள் மனிதன் மட்டும் தனித்துவமான ஒரு
உயிரினம் என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது . இதற்குக்காரணமாக மனிதனின்
பகுத்தறிவு சாட்டப்படுகிறது. மனிதன் தோன்றிய காலந்தொட்டு ஏதோ ஒரு வகையில் தனது
பகுத்தறிவைப் பயன்படுத்தி தனது வாழ்க்கையை இலகுவாக்க முற்பட்டுள்ளான். இன்றைய
ஆய்வுகளின் படி மனிதனின் முதலாவது பகுத்தறிவு சார்ந்த நடவடிக்கையாக கற்களினை
ஆயுதமாகப் பாவித்தமை கூறப்படுகிறது. இதன்பின்னர், மனிதனின் படிப்படியான
வளர்ச்சியானது கலை, கலாச்சாரம், சமயம், விஞ்ஞானம் என பல கிளைகளில் பரந்து
விரிந்துள்ளது.
மனிதனின் இந்த வளர்ச்சியானது ஒவ்வொரு துறையிலும், மனித வாழ்வை வளப்படுத்தி
வருகின்ற அதேவேளை மனிதனின் இந்த கண்டுபிடிப்புக்கள் மற்றும் வளர்ச்சிகளால்
மனிதனும் சில சமயம் பூமியை மனிதனுடன் பங்கிட்டுக்கொள்ளும் ஏனைய விலங்குகளும்
அசௌகரியங்களுக்கு ஆளாகிவருவதும் மறுக்கமுடியாத உண்மை. உதாரணமாக, மனிதனின் தொழில்
நுட்ப வளர்ச்சியை எடுத்துக்கொள்வோம். பூமியிலுள்ள ஏனைய சில விலங்குகள் போல
மனிதனும் அடிக்கடி சண்டை பிடிக்கும் வழக்கம் கொண்டவன். ஆனால், ஏனைய விலங்குகள்
சண்டையிடும்போது அவை இறப்பது வெகு அரிதாகவே நடக்கின்றது. ஆனால், மனிதன்
சண்டையிடும் போது அதுபெரும் யுத்தமாக மாறி மில்லியன் கணக்கான எண்ணிக்கையில் இறந்த
வரலாறுகள் உண்டு. இது தவிர இந்த சண்டைகளால் இந்தப் பூமியை ஒரு நொடியில் அழிக்கும்
வல்லமையை மனிதனின் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இதே போல ஒவ்வொரு துறையிலு மனிதன்,
தன் வளர்ச்சிக்கென உருவாக்கியவைகளின் பக்க விளைவுகளால் அடிக்கடி துன்பப்படும்
காட்சிகள் நாளும் அரங்கேறியவண்ணம் உள்ளன. சில விடயங்களில் இந்த துன்பங்கள் வெறும்
annoyance ஆக இருக்கிற அதேவேளை, சில விடயங்களில் அவை பெரும் அழிவுகளாக
இருக்கின்றன.
மனிதன் தோன்றிய காலந்தொட்டு அவன் ஏதோ ஒருவகையில் ஏதோ ஒரு சமயத்தை
பின்பற்றுபவனாகவும் இருந்து வருகின்றான். கடவுள் என்ற ஒரு கருப்பொருளை கொண்டிராத
நாகரீகங்கள் இல்லை என்றே சொல்லலாம். எனவே, சமயங்களை பின்பற்றுவதால் மனிதன் பல
நன்மைகளை அடைந்துள்ள அதே வேளை, மேலே விபரிக்கப்பட்டது போன்ற பக்க விளைவுகளினால்
side effects அவன் துன்பப்படுவதும் மறுக்க முடியாதது. அந்தவகையில் இவ்வாறான சமயம்
சார்ந்த பக்க விளைவுகளினால், இன்றைய உலக ஒழுங்கில் ஏற்பட்டிருக்கும் சடுதியான
மாற்றம் மற்றும் தமிழீழத் தமிழரின் எதிர்கால இருப்பை தீர்மானிக்கும் ஒரு காரணியாக
அவை மாறிவருதல் தொடர்பாக அலசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
2. சிக்கலான தொடர்புகள்:
மனிதனின் மேற்சொன்ன வளர்ச்சிகளின் பாதகமான பக்கவிளைவுகள் ஒருபோதும் தனித்தனியாக
நிகழ்வதில்லை. அதாவது, மதம் சம்பந்தமான ஒரு பாதகமான விளைவு ஏற்படும்போது அது
மனிதனின் மதம் சம்பந்தமான வாழ்வை மட்டும் பாதிப்பதில்லை. அது மனிதனை பல வகையாக
பாதிக்கிறது. ஒவ்வொரு துறையும் ஒன்றிலொன்று சார்ந்திருப்பதனாலேயே இது நிகழ்கிறது.
உதாரணமாக, மதம் சம்பந்தமான ஒரு கோயில் கட்டுவதற்கு, கட்டட தொழில்நுட்பம்
பாவிக்கப்படுவதை உதாரணமாக கூறலாம். அது போல, அண்மையில் அமெரிக்காவில் நடந்த செப்
11 தாக்குதலின் போது, மதம் சார்ந்த அடிப்படைவாதிகள் தமது தாக்குதலுக்கு அதிநவீன
விமானத்தை (aviation) பாவித்தனர், அதேவேளை தாக்குதல் நடந்தது ஒரு அதிஉயரமான
கட்டடத்திற்கு என்பதனால் (civil engineering) அழிவுகளும் அதி உச்சமாக இருந்தது
(அவ்வாறு ஒரு உயரமான கட்டடம் இல்லாதிருந்தால் அல்லது தரையில் உள்ள ஒரு இலக்கு
தாக்கப்பட்டிருந்தால் இவ்வாறான அழிவு ஏற்பட்டிருக்காது!) இன்றைய நிகழ்வுகள் (அது
நன்மையாயினும் சரி தீமையாயினும் சரி) எவ்வாறு மனிதனின் ஒவ்வொரு துறையிலான
வளர்ச்சியுடனும் மிகச் சிக்கலான உறவைக்கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு
உதாரணமாகும்.
3. மத அடிப்படைவாதம்:
மனிதனை ஒரு சமூக விலங்கு என்று கூறுவார்கள். இந்தவகையில் மனிதன் ஒரு சமூகமாக
உருவாகும் போது அந்த சமூகத்திற்குரிய பல வழமைகள் உருவாகுகின்றன. அந்த வகையில் பல
ஆயிரக்கணக்கான வருடமான வழமைகளை கொண்டுள்ள ஒரு சமூக கட்டமைப்பாக சமயம்
காணப்படுகிறது. சமயம் என்ற சமூகம் ஒரு நிறுவனமயப் பட்டமையும் அதற்கான விதிகள்
உருவானமையும் கண்கூடு. இன்றய நவீன உலகில் ஒருவர் பல சமூகங்களில் அங்கத்தவராக
இருப்பது தவிர்க்க முடியாததாகின்றது. உதாரணமாக சமயம் என்ற சமூகத்தில் அங்கத்தவராக
இருப்பவர் விஞ்ஞானம் என்ற (வேறொரு) சமூகத்திலும், கலாச்சாரம் என்ற (இன்னொரு)
சமூகத்திலும் அங்கத்தவராயிருக்கிறார். அதாவது முன்பு சமயத்துடன் கூட இருந்த
பிரிவுகள் (departments) இன்று தனித்தனியாக பிரிந்து தனிச் சமூகமாகி விட்ட
நிலையில் சமயம் என்ற பிரிவு தனது விதிமுறைகளில் மாற்றம் செய்வது அவசியமாகின்றது.
ஒரு தொழில்சார் நிறுவனத்தைப் போலல்லாது சமயமானது அநேகமாக ஒரு அணுகமுடியாத ஒரு
நிறைவேற்று இயக்குனரை (un approachable CEO) கொண்டிருக்கின்றது. எனவே ஒரு
சமயத்தில் உருவாக்கப்படும் ஒரு விதி (அநேகமாக இந்த விதி நூற்றுக்கணக்கான வருட
வழக்கத்தில் தானாக உருவாகிறது) காலத்திற்கேற்ப மாற்றம்பெறுவது முடியாததாகின்றது.
நிறைவேற்று இயக்குனர் இல்லாத நிலையில் அல்லது அவரின் கருத்தை அறிய முடியாத
நிலையில் உப நிர்வாகிகள் பெரும்பாலும் தேவைப்படும் மாற்றங்களை எடுக்கத்
விரும்புவதில்லை (இது ஏன் என்று அலசுவது இங்கு நோக்கமல்ல.) அவ்வாறு மாற்றங்களை
அனுமதிப்பவர்கள் சிலசமயம் அவர்களது பொறுப்புக்களிலிருந்து
துரத்தியடிக்கப்படுவதும் உண்டு. எனவே சமயங்கள் பொதுவாக அடிப்படைவாதக்
கருத்துக்களைக் கொண்டவையாகவே காணப்படுகின்றன.
எம் ஒவ்வொருவரினது மனமும் புதிய விடயங்களை கற்றுக்கொள்வதிலும் புதிய நடைமுறைகளை
ஏற்றுக்கொள்வதிலும் வெவ்வேறு வேகத்தில் செயல்படுகின்றது. இருவேறு வகையான மனங்கள்
ஒத்திசைய முற்படும் போது (resonance) அங்கு ஒரு குழப்பம் (conflict) ஏற்படுவது
தவிர்க்க முடியாதது. ஆனாலும் காலப்போக்கில் அவ்விரு மனங்களும் தக்குள் சமரசம்
செய்துகொண்டு இயல்பாக வாழப்பழகிவிடுவதும் உண்டு. பல மனங்கள் ஒன்று சேர்ந்து
உருவாவதே சமூகம். சமூகங்கள் தமக்குள் வழமைகளை உருவாக்குவதும் பின்னர் படிப்படியாக
அவற்றை மாற்றுவதும் காலம்காலமாக நடந்து வருகின்றது. சமூகங்கள் மத ரீதியாக, இன
ரீதியாக, தொழில் ரீதியாக என பல விதமான சமூகங்கள் இன்று எம்முள் நிலவி வருகின்றன.
அவற்றுக்கிடையில் ஒத்திசைவும் முரண்பாடும் ஏற்படுவது நாளும் நிகழ்ந்து
வருகின்றது.
பல சமூகங்கள் வெற்றிகரமாக ஒத்திசைவதும் அது கைகூடாமல் போய் முரண்பாடும் அழிவும்
ஏற்படுவது இன்றும் கண்கூடு. உதாரணமாக, இரண்டு பாடசாலைகளுக்கிடையிலான கிறிக்கட்
மாட்சை இருவேறு சமூகமாக இருந்து பார்க்கும் மக்கட் கூட்டம் மாகாணரீதியிலான மாட்சை
பார்க்க ஒன்றுபட்டு ஒரு சமூகமாகிறது. சிலசமயம் மக்களிடை முரண்பாடுகள் ஏற்பட்டு
ஆட்டம் நிறுத்தப்படுகிறது. ஒத்து வாழ முடியாத மக்கள் கூட்டங்கள் பிரிந்து தனி
சமூகங்கள்/மாகாணங்கள்/நாடுகளாகின்றன.
இந்த வகையில் இஸ்லாம் என்ற சமய ரீதியிலான சமூகமும் மேற்கு என்ற ஒரு கலாசார
ரீதியிலான சமூகமும் ஒத்திசைய முற்படுகையில் அங்கும் குழப்பங்கள் ஏற்படுகிறது.
இந்தக் குழப்பங்கள் அரசியல்/ பொருளாதாரம் போன்ற பல சிக்கலான முனைகளில்
விரிவடையும் போது அங்கு குழப்பங்கள் அதிகரிக்கின்றன. இவ்வாறு இஸ்லாமிற்கும்
மேற்கிற்கும் ஏற்பட இருந்த ஒத்திசைவு கைகூடாமல் போய் (அது எவ்வாறு ஏன் கைகூடமல்
போனது என்று ஆராய்வது இங்கு நோக்கமல்ல) அது ஒரு போட்டியாக மாறி போராக
நடந்துகொண்டிருக்கின்றது. ஏற்கனவே, பொருளாதார, ஆயுத ரீதியில் பன்மடங்கு பலத்தைக்
கொண்ட மேற்குடன் மோதுவதற்கும் (மனித)வளங்கள் தேவைப்படுகிறது. எனவே இஸ்லாம் என்ற
மதத்தின் பேரால் மக்களை திரட்டுவதே பலவழிகளிலும் உகந்தது என்று கண்டு இஸ்லாமிய
அடிப்படைவாதிகள் மத ரீதியாக மக்களை திரட்டுவதில் ஈடுபட்டுள்ளனர். இந்த வகையில்
மேற்கிற்கெதிரான போரில் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற கோசம் முக்கிய இடம்
பெறுகின்றது.
4. இஸ்லாமிய மற்றும் பௌத்த மத அடிப்படைவாதம்: அதிர்ச்சிகரமான ஒற்றுமைகள்
ஒருவகையில் பார்க்கும்போது, ஈராக்கில் மிகக் குறுகிய காலத்தில் அரங்கேறிய
விடயங்கள் இலங்கைத் தீவில் மிக நீண்ட கால வீச்சில் (span) நடக்கிறதோ என்று
எண்ணத்தோன்றுகிறது. அதாவது, ஈராக்கில் ஒரு சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரான
சதாம்குசேன் ஆட்சிசெய்கிறார். பிறகு அமெரிக்கா ஈராக்கை கைப்பற்றுகிறது. பின்
அமெரிக்கா ஈராக்கின் அதிகாரத்தை பெரும்பான்மையினரின் கைகளில் ஒப்படைக்கிறது. அதன்
பின்னர், பல ஆண்டுகாலமாக இருந்த தமது வெறியை சிறுபான்மையினரை
துன்பப்படுத்துவதன்மூலம் தீர்த்துக்கொள்ள பெரும்பான்மையினத்தை சேர்ந்த தீவிர
சக்திகள் முற்படுகின்றன. இதனால் பெரும் அழிவுகள் ஏற்படுகின்றன. இலங்கையிலும் கூட,
முழு இலங்கையும் பல முறை தமிழ் மன்னர்களால் ஆழப்படுகிறது. பிரித்தானியர் முழு
இலங்கையையும் கைப்பற்றுகின்றனர். பின்னர் அவர்கள் ஆட்சியை பெரும்பான்மையினரிடம்
ஒப்படைக்கின்றனர். சிங்களவர்கள் இப்போது அந்த அதிகாரத்தைக் கொண்டு
சிறுபான்மையினரை துன்புறுத்துகின்றனர். தமிழர்களை விட்டால் மீண்டும் முழு
இலங்கையையும் பிடித்துவிடுவார்கள் என்ற பயம் ஒருகாரணமாகக் கூட இருக்கலாம்.
ஈராக்குடன் ஒவ்வொரு விடயத்தையும் ஒப்பிடுவது பொருத்தமில்லாத அதேவேளை ஒரு பெரிய
அளவில் பார்க்கும் போது பல பொருத்தபாடுகள் தெரிவது மறுக்கமுடியாதது.
இந்த வகையில், இலங்கையில் தமிழருக்கு எதிராக மக்களை அணிதிரட்டவேண்டிய தேவை
இயல்பாக வருகின்றது. பெரும்பாலான சிங்களவர்கள் பௌத்தர்களாக இருந்த படியாலும் மதம்
போன்ற விடயங்கள் மிக இலகுவில் மக்களை போதை போன்று அடிமையாக்கக் கூடியவை
என்பதாலும் பௌத்தமதத்தை முன்னிலைப்படுத்தி தமிழர் எதிர்ப்புக்கு மக்கள்
அணிதிரட்டப்பட்டனர். பேரினவாதிகள், அவ்வப்போது சிங்களம் என்ற மொழியையும் பாவித்து
மக்களை அணிதிரட்டத் தவறவில்லை. உதாரணமாக தனிச்சிங்கள சட்டத்தைக் கூறலாம்.
தேவைக்கேற்ப சிங்கள பௌத்தம் என்ற பதமும் பாவிக்கப்பட்டு தமிழருக்கெதிரான
வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
தமிழரை அழிக்கும் திட்டம் ஆரம்ப காலத்தில் மிக நாகரீகமாக முன்னெடுக்கப்படுகிறது.
அதாவது தமிழ் மொழியை அழித்துவிட்டால் தமிழரும் “அழிந்து”விடுவர் என்ற கணிப்பில்
தனிச்சிங்களச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு தமிழை ஓரங்கட்டும் நடவடிக்கைகள்
தொடங்கின. பின்நாளில் தனிச்சிங்களச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்ட போதும்
நடைமுறையில் தனிச் சிங்களமே இருந்தது. அகிம்சை முறையில் இதற்கு எதிர்ப்புத்
தெரிவிக்க முயன்ற தமிழர் குழுக்கள் அதிகாரத்தை பாவித்து வன்முறையால்
அடக்கப்பட்டன. ஆனால் பின்நாளில், தமிழர் ஒருங்கிணைக்கப்பட்ட தமது எதிர்ப்பை ஆயுத
ரீதியாக நிறுவியபோது பேரினவாதத்தின் “நாகரீக” முகமூடி வேறுவழியின்றி உதிர்ந்து
போக, இறுதி ஆயுதமாக / அடித்தள (crude) எதிர்ப்பாக கலப்படமற்ற பேரினவாதத்தை
கக்கவேண்டிய நிலைக்கு ஆட்சியிலுள்ளவர்கள் தள்ளப்பட்டனர். அமெரிக்கர்களையும்
அமெரிக்காவையும் அழிப்பதே தமது குறிக்கோள் என எவ்வாறு இஸ்லாமிய அடிப்படைவாதிகள்
கூச்சலிடுகின்றனரோ, அதே போல, வேறுவழியின்றி, தமிழரை அழிப்பதே தமது குறிக்கோள் என
சிங்கள பேரினவாதிகளும் மதத் தலைவர்களும் நேரடியாகவே கூச்சலிடத்தொடங்கினர். இதன்
பல கட்டங்கள் இன்றைய நிதர்சனமாக நாளும் அரங்கேறுவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
இனி, இன்று மேற்குலகை உலுக்கிவரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குக்கும் பௌத்த மத
அடிப்படைவாதிகளுக்கும் இடையில் உள்ள சில அதிர்ச்சிகரமான ஒற்றுமைகளை உற்று
நோக்குவோம்:



5. மத அடிப்படை வாதத்துக்கெதிரான போரின் எதிர்காலம்:
மதங்கள் பொதுவாக அடிப்படைவாதக் கருத்துக்களை கொண்டிருப்பதால் தேவைப்படும்போது
அவற்றை ஆயுதமாக்க விஷமிகள் தவறுவதில்லை. அந்த வகையில் தான் இன்றைய அல்குவேடா
வையும் இலங்கையின் சிங்கள பேரின வாதிகளையும் நோக்கவேண்டியுள்ளது. அதாவது மதத்தின்
உப தலைவர்களான பொறுப்பு (மதத் தலைவர்கள் மூலம்) அவர்களிடம் ஏற்கனவே உள்ளது. எனவே,
மாற்று வழிகள் எதுவும் கைகூடாத நிலையில் வேறுவழி இன்றி அவர்களின் இறுதி
மார்க்கமாக இவை அமைந்துள்ளன.
ஒப்பிட முடியாத ஆயுத, பொருளாதார வளங்களை கொண்ட மேற்கிற்கு எதிரான போரிற்கான
ஆட்திரட்டலில் இஸ்லாமிய அடிப்படைவாதம் நன்கு பயன்படுத்தப்படுகிறது. அதே போல,
தமிழருக்கெதிரான போரில், சிங்கள பௌத்த அடிப்படைவாதக் கோஷம் வாக்குகளை சிங்களத்
தலமைகளுக்கு அள்ளி வழங்குவது கண்கூடு.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கெதிராக மேற்கின் செயல்முறை வடிவங்களாக பலவிடயங்களை
கருத முடியும். அவற்றில் முக்கியமானது மத அடிப்படைவாதிகள் என்ற சொற்பிரயோகமும்
ஆகும். ஏற்கனவே குறிப்பிட்டது போல எல்லாச் சமயங்களிலும் அடிப்படைவாதக்
கருத்துக்கள் இருந்தபோதும், மத அடிப்படைவாதம் என்ற சொல் இன்று மிகப்பிரபல்யம்
வாய்ந்ததாக இருக்கின்ற அதே வேளை அது இஸ்லாமிய அடிப்படைவாதிகளை மட்டுமே
குறிக்கின்றது. “மத அடிப்படைவாதிகளை” ஒடுக்குவதற்கான நேரடி மற்றும் திரைமறைவு
வேலைகள் என மேற்கின் சகல அரசுகளும் தமது அத்தனை படைகளையும் இந்தவேலையில்
முடுக்கிவிட்டுள்ளன.
இலங்கையில் கருக்கொண்டு வளர்ந்துவரும் பௌத்தமத அடிப்படைவாதத்தை எதிர்க்கும்
தனித்தரப்பாக தமிழர் தரப்பு மட்டும் இருக்கிறது. மேலும், உலகில் வேறுநாடுகளிலுள்
பௌத்தமத துறவிகள் இதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லாமல் “துறவிகளாக” மட்டும்
இருக்கிறார்கள். எனவே, பௌத்த மத அடிப்படைவாதம் என்ற சொல் பிரபல்யம் பெற முடியாமல்
இலங்கைத் தமிழரினதும் இலங்கையின் பௌத்தமத அடிப்படைவாதத்தினதும் எதிர்காலம்
survival of the fittest என்ற தத்துவத்திற்கமைய முடிவை நோக்கி காத்திருக்கின்றன.
எனவே, சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளுக்கெதிரான போரில் புலம்பெயர் மற்றும்
புலத்திலுள்ள தமிழரும் வெற்றியை உறுதி செய்வதிலும் பின்னர் மீண்டும் உறுதி
செய்வதிலும் ஈடுபடாமல் உலகநாடுகள் வந்து சுதந்திரம் வாங்கித் தரும் என்றோ அல்லது
புலிகள் எல்லாம் செய்துமுடிப்பார்கள் என்றோ வாளாவிருப்பின் இப்போது தெரிவது தான்
முடிவிலும் முடிவாகும்.
உலகில் போர் மூளும்போது இலபம் அடையும் ஒரு தரப்பாக இருப்பவர்கள் ஆயுத
உற்பத்தியாளரும் அது சம்பந்தமான ஆரய்ச்சியாளரும். இன்றய மேற்குலகின் இஸ்லாமிய மத
அடிப்படைவாதிகளுக்கெதிரான போரில் ஆராய்ச்சித் துறையில் மத அடிப்படைவாதம்
சம்பந்தமான ஆராய்ச்சியும் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. இஸ்லாம் தொடர்பான பல
புத்தகங்கள் best seller களாக வந்தன. அத்துடன் இது சம்பந்தமான ஆராய்ச்சிகள்
இன்றும் கூட மிக விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. இந்த வகையில், தமிழர் தரப்பை
பயங்கரவாதிகளாக காட்டி “பயங்கர வாதத்திற்கெதிரான” மேற்கின் போரில் தானும் இணைந்து
கொள்ள இலங்கை காட்டிய ஆர்வத்தை இலங்கையில் மையங்கொண்டு வீறுகொண்டு வளர்ந்து வரும்
பௌத்த மத அடிப்படைவாதத்தை அம்பலப்படுத்துவதில் தமிழ் கல்விச்சமூகம் காட்டவில்லையோ
என்று எண்ணத்தோன்றுகிறது.
இந்த வகையில், மத அடிப்படைவாதம் என்ற விடயத்தில் இலங்கையின் பௌத்த மத
அடிப்படைவாதிகளை அம்பலப்படுத்தவேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும். இவ்வாறு
ஆராய்ச்சிமூலமாக பலவகையான நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
1) இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்கொள்ள நீண்டகாலத்தில் முன்னெடுக்க
எடுக்கப்படும்/விவாதிக்கப்படும் நடவடிக்கைகளை முன்கூட்டியே அறிந்து அவ்வாறான
நடவடிக்கைகளை நாமும் எமக்கேற்றவாறு எவ்வாறு பயன்படுத்துவது என அறிதல்
2) இலங்கையின் பௌத்த மத அடிப்படைவாதம் தொடர்பான ஆதாரபூர்வமான விடயங்களை இஸ்லாமிய
அடிப்படைவாதம் தொடர்பான ஆராய்ச்சியாளர்களுக்கு விளக்குவதன் மூலம் அவர்களையும்
பௌத்தமத அடிப்படைவாதிகள் தொடர்பாக ஆராய்ச்சி செய்யத் தூண்டுதல்
3) சர்வதேச சஞ்சிகைகளில் வெளியாகும் பௌத்த மத அடிப்படைவாதம் தொடர்பான கட்டுரைகள்
எமது பிரச்சாரத்துக்கு வலுச்சேர்க்கும்.
போன்றன அவற்றுள் சில.
இது தொடர்பான ஆராய்ச்சிக் கல்வியை தொடர பல்வேறுவகைகளில் ஊக்குவிப்பு வழங்குவது
அவசியம். உதாரணமாக, பௌத்த மத அடிப்படைவாதம் தொடர்பான ஆராய்ச்சிக்கல்வியை தொடர
முன்வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதன் மூலம் இத்தகைய
நடவடிக்கைகளை ஊக்குவிக்கலாம்.
இலங்கைத் தீவில் தங்களின் வரலாற்றை மகாவம்சத்தில் பின்னிணைப்பாக (Appendix)
பிக்குமார் எழுதப்போகிறார்களா, அல்லது வேலை வெட்டியில்லாத மேலைத்தேய ஆய்வாளர்
பொழுது போக்கிற்காக எழுதப் போகிறார்களா அல்லது தாங்களே எழுதப்போகிறார்களா என்று
தீர்மானிக்கவேண்டிய கட்டத்தில் தமிழீழத்தமிழர்கள் இருக்கின்றார்கள்.
This post has been edited by பண்டிதர்: Sep 19 2007,
02:05 AM