myகதிரவன்.கொம்

www.mykathiravan.com

பரதநாட்டியம் தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா?


தமிழ்நாட்டைப் போலல்லாது ஈழத்தில் பரதநாட்டியம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரிதும், மேட்டுக் குடியினரதும் சொத்தல்ல. ஈழத்தமிழர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்குப் பரதநாட்டியம் கற்பித்துப் பெரும் பணச்செலவில் அரங்கேற்றம் செய்விக்கிறார்கள்.

அதே வேளையில் பரதநாட்டிய அரங்கேற்றத்தன்று வெளியிடப்படும் அரங்கேற்ற மலர்களில் பரதநாட்டியம் பரதமுனிவரால் வடமொழியில் எழுதப்பட்டதாகவும், பரத என்ற சொல்லுக்குப் பவம், நயம், தாளம் என்று விளக்கம் கொடுப்பது மட்டுமல்லாமல், அரங்கேற்றத்தைக் காணவும், தொடக்கி வைக்கவும் வரும் வேற்று இன மக்களுக்கும், பிரமுகர்களுக்கும் அதையே கூறுகிறார்கள். அவர்களும் சமஸ்கிருத மொழியில் பரதமுனிவரால் இயற்றப்பட்ட நாட்டிய சாத்திரத்தைத் தான் தமிழர்கள் இரவல் வாங்கினார்கள் என்று நினைத்துக் கொண்டு, தமிழரின் தமிழ் நாட்டிய விழாவுக்கு வந்து சமஸ்கிருதத்தின் புகழை எண்ணிக் கொண்டும் போகிறார்கள்.

பரதநாட்டியத்தின் உயிரும், வேர்களும் தமிழரின் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் ஆழப் பதிந்திருக்க நாமே பரதநாட்டியத்தை நாங்கள், தமிழர்கள் இரவல் வாங்கியதாகக் கூறுவதன் அறியாமையை என்னவென்பது.

சிலப்பதிகாரத்திலேயே தமிழரின் நாட்டியக்கலையைப் பற்றி விளக்கமாக உள்ளது. மாதவியின் அரங்கேற்றத்தை விவரிக்கும் இளங்கோவடிகள், ஆட்ட வகைகள், உடையலங்காரம், ஒவ்வொரு வகையான ஆட்டத்திற்கும், தேவையான் மேடையின் அளவு அலங்காரத்தைக் கூட விவரிக்கிறார். தமிழரின் பண்டைக்கால நாட்டிய நன்னூல் தமிழெதிரிகளால் அழிக்கப் பட்டு விட்டது.

உண்மையில் பரதநாட்டியம் என்பது 20ம் நூற்றாண்டில் தமிழரின் கலைவடிவமாகிய சதிருக்குப் புத்துயிரும், புதுவடிவமும் கொடுக்கப்பட்ட பின் இணைக்கப் பட்ட புதிய பெயர். தமிழரின் நாட்டியக் கலையான சதிர் அல்லது பரதநாட்டியத்துக்கும் பரதமுனிவருக்கும், சமஸ்கிருதத்துக்கும் எள்ளளவும் தொடர்பும் கிடையாது.

என்று தான், நாங்கள் தமிழர்கள் எங்கள் தலையில் நாங்களே மண்ணையள்ளிப் போடுவதை நிறுத்துவோம் என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

தமிழரின் பரதநாட்டியம் அல்லது சதிராட்டம் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகச் சமஸ்கிருதமயமாக்கப் பட்டு விட்டது. சோழர் காலத்தில் தேவ அடியார்கள் அல்லது தேவதாசிகள் எனப்படும் பெண்கள் சைவசமயத்துக்குத் தொணடு செய்வதற்குத் தங்களை அர்ப்பணித்தவர்களாக இருந்தார்கள். இவர்கள் சைவ சமய நெறிகளிலும், ஆடல், பாடல், ஓவியங்கள் வரைவதிலும் வல்லவர்களாகத் திகழ்ந்ததோடு மக்களின் நன் மதிப்பைப் பெற்றவர்களாக இருந்தார்கள். இவர்கள் இன்றைய கிறிஸ்தவ சகோதரிகள் போலவும், புத்தபிக்குணிகள் போலவும், தமிழ்நாட்டுக் கோயில்களில் தொண்டாற்றினார்கள்.

சோழரின் வீழ்ச்சிக்குப் பின்பு பிறமதத்தவர்களின் படையெடுப்பினால் ஆலயங்கள் சூறையாடப்பட்டு அழிக்கப் பட்டன. அவர்களும் துன்புறுத்தப்பட்டும், ஆதரவற்றும் அந்த தேவ அடியார்கள், 'தேவடியாள்' களாக்கப் பட்டார்கள். அவர்களால் சைவாலயங்களில் ஆடப் பெற்ற சதிராட்டமும் கீழ்த்தரமானதாகக் கருதப்பட்டது. ஒரு பழந்தமிழ்க்கலை வீழ்ச்சியுற்றது.




19ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சதிர் என்றாலே விபச்சாரிகளின் ஆட்டம் என்ற நிலையில் கருதப்பட்டது. இந்த நிலையில் தான் 19 நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சாவூர் சகோதரர்கள் பொன்னையா, சின்னையா, வடிவேலு ஆகியோரும் அவர்களைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரம்பிள்ளை, கிருஸ்ணையர், பாலசரஸ்வதி, ருக்குமணிதேவி அருண்டேல் போன்ற பலர் தமிழரின் சதிராட்டத்துக்குப் புது வடிவமும், புத்துயிரும் கொடுத்தார்கள். சதிராட்டத்துக்கு திரு.கிருஸ்ணையர் அவர்கள் தான் 1930 இல் பரதநாட்டியம் என்று பெயர் கொடுத்தார்.

பரதநாட்டியத்தின் வளர்ச்சியில் திருமணி. ருக்மணிதேவி அருண்டேலினதும், கலாசேத்திரத்தினதும் பங்களிப்பு அளப்பிட முடியாதது. அதே வேளையில் பரதநாட்டியத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் மேலோங்கத் தொடங்கியது. அதனால் அவர்கள் பரதநாட்டியத்தைச் சமஸ்கிருதப்படுத்தினார்கள். அதனால் பரத நாட்டியத்தின் தமிழ் வேர்கள் மறைக்கப் பட்டன, நாங்களும் இழிச்ச வாய்த் தமிழர்கள் அதை ஏற்றுக் கொண்டோம்.

பரத( சதிர்) நாட்டியத்தில் அவர்களால் ஏற்படுத்தப் பட்ட மாற்றங்களெல்லாம் நடை உடையலங்காரம், பல்வேறு விதமான பாடல்களில் மட்டும் தான். அடிப்படை நாட்டிய நுட்பத்தில் எந்த விதமாற்றமும் ஏற்படுத்தவில்லை.இதே பரதநாட்டியத்துக்கு சதிராட்டம் அல்லது தேவராட்டம் என்ற பெயரும் வழங்கப்பட்டு வந்துள்ளது.

பரதநாட்டியம் அல்லது சதிரின் வேர்கள் ஆழமாக தமிழரின் பண்பாட்டிலும், வரலாற்றிலும் பின்னிப் பிணைந்திருக்கும் போது, எப்படி இதன் தமிழ்த் தொடர்பு மறைக்கப் பட்டது?

முதலில் இந்தப் பழந்தமிழரின் நாட்டியக் கலைக்கு ஒரு புதுப் பெயர் கொடுக்கப்பட்டது (பரதநாட்டியம்),அதைத் தொடர்ந்து இந்தப் புதுப் பெயருக்கு ஒரு நவீன விளக்கம் (பவ, ராக, தாளம்) அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தப் புதிய பெயருக்கு ஒத்த பெயருள்ளவராகவிருந்த ஒரு பரதமுனி என்ற ஒருவரை, இந்த தமிழரின் நாட்டியதுக்குத் தொடர்பு படுத்தினார்கள்,

எல்லாவற்றையும் கலந்து ஒரு அழகான் இதிகாசக் கதையைக் கட்டி விட்டார்கள்.இதைத் தொடர்ந்து, மீண்டும், மீண்டும் ஒரே பொய்யை எல்லோரிடமும், எல்லா இடங்களிலும் கூறினார்கள், அதை உண்மையாக எங்களில் பலரால் ஒப்புக் கொள்ளப் பட்டு விட்டது.

இந்தக் கட்டுக்கதையை, நம்பி அதை நாங்களே மீண்டும் ஒப்பிக்கும் முன்பு, நாம் தமிழர் இந்தக் கதையைப் பற்றி சிந்திக்க வேண்டும், என்ன நோக்கத்தில் தமிழரின் நாட்டியக் கலைக்கு இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் இது தமிழருக்கே தமிழரின் பரத(சதிர்) நாட்டியத்தின் தமிழ்த் தொடர்பில் சந்தேகப்பட வைக்கிறது, பரத நாட்டியத்தின் வேர்கள் தமிழரின் கலாச்சாரத்திலும், வரலாற்றிலுமுள்ளதென்பதை மறுத்து, தமிழர்கள் பரதநாட்டியத்தை இரவல் வாங்கியதாகக் காட்டுகிறது.

இனிமேலாவது, இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல , உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழர்கள் பரதநாட்டியத்தை மீண்டும், முழுவதும் தமிழாக்க முயற்சிக்க வேண்டும்.

 

© Copy Right 2007 www.mykathiravan.com  | Allright Reserved | Contact: mykathiravan@gmail.com

  hits